Friday, April 8, 2011

சென்னை ஏர்போர்ட்டில் 341 லேப்டாப் கொள்ளை

விமான நிலைய குடோனில் இருந்த 341 லேப்டாப்களை திருடிய, கார்கோ ஊழியர்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 92 லேப்டாப்கள், ரூ.46.7 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. எச்.பி. கம்ப்யூட்டர் நிறுவனத்தின் சென்னை கிளை மேலாளர் வெங்கடேஸ்வரன், மீனம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் கடந்த மார்ச் 25ம் தேதி ஒரு புகார் கொடுத்தார்.
அதில், “சீனாவில் இருந்து பிப்ரவரி 13ம் தேதி முதல் 25ம் தேதி வரை 13 பெட்டிகளில் 640 எச்.பி. லேப்டாப்களை சென்னைக்கு நாங்கள் இறக்குமதி செய்தோம். அவற்றை ஏர்போர்ட்டில் இருந்து எங்களிடம் ஒப்படைக்க சுதர்சன் கார்கோ நிறுவனத்தை ஏஜென்டாக நியமித்தோம். அவர்கள் சென்று டெலிவரி எடுத்தபோது, 6 பெட்டிகளில் இருந்த 341 லேப்டாப்களை காணவில்லை. ஏர்போர்ட் அதிகாரிகள் தங்களுக்கு தெரியாது என்று கூறிவிட்டனர். எனவே திருட்டு போன லேப்டாப்களை கண்டுபிடித்து கொடுக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தனர்.
இதுதொடர்பாக, இன்ஸ்பெக்டர் ஆரோக்கிய ரவீந்திரன் வழக்குப்பதிவு செய்தார். புறநகர் கமிஷனர் கரண் சின்ஹா உத்தரவின்படி, இந்த வழக்கு மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டது. உதவி கமிஷனர் ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர் சங்கர் ஆகியோர் விசாரித்தபோது கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் பெங்களூர் மற்றும் சென்னையில் உள்ள எலக்ட்ரானிக் கடைகளில் கடந்த 1ம் தேதி அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
அப்போது, கார்கோவில் திருட்டு போன 5 லேப்டாப் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து குற்றவாளிகளைப் பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. நேற்று முன்தினம் கார்கோ பகுதியை அவர்கள் கண்காணித்தனர். பார்க்கிங் பகுதியில் நின்றிருந்த 4 பேரை பிடித்து, அவர்கள் வைத்திருந்த பார்சல்களை சோதனை செய்தனர். அதில் திருட்டு போன 2 லேப்டாப் இருந்தன.
விசாரணையில் அவர்கள், ஏர்போர்ட் கார்கோ வளாகத்தில் கான்ட்ராக்ட் அடிப்படையில் போர்ட்டர்களாக வேலை செய்த ஜானகிராமன் (32), எழிலரசன் (34) என்றும், அம்பத்தூர் செல்லத்துரை, ஆதம்பாக்கம் பிரேம்குமார் ஆகியோர் அவர்களுக்கு உடந்தையாக இருந்ததும் தெரிந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின்படி 92 லேப்டாப் கைப்பற்றப்பட்டன. லேப்டாப்களை ரூ.60 லட்சத்துக்கு விற்று, அதில் நால்வரும் செலவு செய்தது போக அம்பத்தூரில் உள்ள செல்லதுரை வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.46 லட்சத்து 70 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

No comments:

Post a Comment