Saturday, May 7, 2011

ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு, மற்றும் புதுப்பித்தல்!

சென்னை: ஆன்-லைனில் அரசு வேலை வாய்ப்புக்கு பதிவு செய்வது தொடர்பாக வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது அதில் கடந்த 2010 செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் தமிழக வேலை வாய்ப்பு அலுவலகப்பணிகள் இணைய தளம் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முதலில் தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலக உயர்ப் பதிவேட்டின் விபரங்கள் அந்த இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. இதன் பின்னர் அனைத்து வேலை வாய்ப்பு அலுவலகங்களிலும் பதிவு செய்துள்ள சுமார் 70 லட்சம் மனுதாரர்களின் பதிவு விபரங்களும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதனால் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு மற்றும் புதுப்பித்தல் பணிகளுக்கு வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு வரத்தேவையில்லை மனுதாரர்கள் அவர்கள் இருக்கும் இடத்திலேயே இணையதளம் மூலமாக இதை செய்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மனுதாரர்கள் நெடுந்தொலைவிலிருந்து பயணம் செய்து சென்னை வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு வரவேண்டியதில்லை

இந்நிலையில் தற்போது மதுரையிலும் தொழில் மற்றும் வேலை வாய்ப்பு கிளை அலுவலகம் தொடங்கப்பட்டுள்ளதால் 15 தென்மாவட்ட பட்டதாரி மனுதாரர்கள் சென்னைக்கு வராமல் மதுரை வேலைவாய்ப்பு கிளை அலுவலகத்திலேயே தங்களது பதிவு, கூடுதல் பதிவு, புதுப்பித்தல் மற்றும் இதரப்பணிகளை செய்து கொள்ளலாம். வேலைவாய்ப்பு அலுவலக, பதிவுப்பணிகள் இணையதளம் மூலமாக கடந்த சில மாதங்களாக மேற்கொள்ளப்பட்டு வந்த இத்திட்டத்தின் சில நடைமுறை சிக்கல்கள் ஏற்பட்டதாலும் அவை உடனுக்குடன் தொழில் நுட்ப வல்லுனர்களால் சரி செய்யப்பட்டு வருகிறது.

மேலும் இத்திட்டம் முழுமையாகவும், சிறப்பாகவும் மனுதாரர்களை சென்றடையும் வகையில் செயல்படத் தேவையான நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுவாக வேலை வாய்ப்பு அலுவலகங்களின் தேவைக்கேற்ப இதர வேலை வாய்ப்பு அலுவலகங்களில் இருந்து பணியாளர்கள் மாற்றுப் பணியில் அனுப்பப்பட்டு, அவ்வலுவலகப்பணிகள் தொய்வின்றி நடைபெறத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது

No comments:

Post a Comment