Sunday, February 27, 2011

லிபியாவில் மக்கள் எழுச்சி அதிகரிப்பு​ - சாலையெங்கு​ம் உடல்கள் கிடக்கின்ற​ன - மீண்டு வந்த இந்தியர்கள்

டெல்லி: லிபியாவில் மக்கள் போராட்டம் அதிகரித்துள்ளது. அவர்கள் மீது மிகக் கடுமையான தாக்குதல் நடந்து வருகிறது. சாலையெங்கும் உடல்களாக கிடக்கின்றன. அவற்றை புல்டோசர்கள் மூலம் அகற்றி குப்பைகளில் வீசுகிறார்கள் என்று அங்கிருந்து மீண்டு வந்த இந்தியர்கள் கூறியுள்ளனர்.

லிபியாவுக்கு அனுப்பப்பட்ட 2 சிறப்பு ஏர் இந்தியா விமானங்கள் மூலம் முதல் கட்டமாக 528 பேர் வந்து சேர்ந்தனர். இன்னும் பலர் லிபியாவிலேயே இருப்பதாக, மீண்டு வந்தவர்கள் தெரிவித்துள்ளனர். லிபியாவில் அமைதி திரும்பும் என்ற நம்பிக்கையுடன் அங்கேயே இருக்க அவர்கள் விரும்புவதாகவும் கூறப்படுகிறது. அதேசமயம், 88 பேர் அருகில் உள்ள துனிஷாயவுக்கு தப்பிச் சென்று புகலிடம் அடைந்துள்ளனராம்.

லிபியாவில் சிக்கித் தவித்து வரும் இந்தியர்களை மீட்க இரண்டு சிறப்பு விமானங்களை ஏர் இந்தியா நிறுவனம் இயக்குகிறது. தினசரி 2 விமானங்களை தலைநகர் திரிபோலிக்கு இயக்கிக் கொள்ள லிபியா நாடு அனுமதி அளித்துள்ளது.

இதையடுத்து நேற்று முன்தினம் முதல் இந்த சேவையை தொடங்கியது ஏர் இந்தியா. முதல் 2 விமானங்கள் நேற்று லிபியா சென்று இரண்டு கட்டமாக 528 இந்தியர்களை மீட்டு கொண்டு வந்துள்ளன.

முதல் விமானம் 291 பேருடன் டெல்லிக்கு வந்து சேர்ந்தது. அதேபோல 237 பேருடன் இரண்டாவது விமானம் வந்து சேர்ந்தது.

இரு விமானங்களிலும் இருந்தவர்களில் 36 பேர் தமிழர்கள். மீண்டு வந்த ஈரோட்டைச் சேர்ந்த கவிதா என்பவர் கூறுகையில், அங்கு நாங்கள் வீடுகளுக்குள்ளேயே அடைபட்டுக் கிடந்தோம். சாப்பாடு, தண்ணீர் சிக்கலாக இருந்தது.

எங்களது உயிருக்கு ஆபத்து இல்லை என்றாலும் கூட பயத்துடன் இருந்தோம். இன்னும் நிறைய பேர் அங்கேயே உள்ளனர். அமைதி திரும்பும் என்ற நம்பிக்கையில் உள்ளனர் என்றார்.

முகம்மது சாலி என்ற என்ஜீனியர் கூறுகையில், லிபியாவில் நிலைமை மோசமடைந்துள்ளது. மக்கள் வீடுகளிலேயே அடைந்து கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நாங்களும் உயிரைக் கையில் பிடித்தபடி வீடுகளுக்குள் அடைந்து கிடந்தோம்.

தண்ணீர், உணவு கிடைப்பதில் பெரும் சிரமம் நிலவுகிறது. மக்கள் தெருக்களில் இறங்கிப் போராடி வருகின்றனர். போலீஸாரை எங்குமே காண முடியவில்லை. காவல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. மக்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நிலை காணப்படுகிறது.

இதை பயன்படுத்திக் கொண்டு பலர் வீடுகளை சூறையாடிக் கொண்டிருக்கின்றனர். இறந்தவர்களின் உடல்கள் சாலைகளில் விழுந்து கிடக்கின்றன என்றார்.

இன்னொருவர் கூறுகையில், மக்கள் போராட்டம் பெரும் கலவரமாக மாறியுள்ளது. நாங்கள் விமான நிலையத்திற்கு வரும் வழியெங்கும் உடல்களைப் பார்த்தோம். அவற்றை புல்டோசர் மூலம் அள்ளி குப்பைகளில் வீசுகின்றனர். பாதுகாப்பு சுத்தமாக இல்லை என்றார்.

அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க இந்தியத் தூதரகம் இன்னும் விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

லிபியாவிலிருந்து மீண்டு வந்த இந்தியர்களை விமான நிலையத்தில் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் இ. அகமது, வெளியுறவுத்துறை செயலாளர் நிரூபமா ராவ் ஆகியோர் வரவேற்றனர்.

நேற்று வந்த விமானங்களில் தமிழகம், உ.பி., கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்ளைச் சேர்ந்தவர்கள், வெளியுறவுத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தனர்.

தலைவன் கோட்டை தமிழர்கள் வரவில்லை

இதற்கிடையே, லிபிய மோதலில், 2 பேரைப் பறி கொடுத்திருக்கும் நெல்லை மாவட்டம் தலைவன் கோட்டை கிராமத்தினர், தங்களது பகுதியைச் சேர்ந்த யாரும் முதல் கட்ட மீட்பு விமானங்களில் அழைத்து வரப்படாததால் பெரும் கவலை அடைந்துள்ளனர்.

தலைவன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த அசோக்குமார் மற்றும் முருகையா பாண்டியன் ஆகியோர் லிபிய மோதலில் சிக்கி பலியாகியுள்ளனர். மேலும் 28 பேர் அங்கு சிக்கியுள்ளனர்.

இவர்கள் மீட்பு விமானங்கள் மூலம் அழைத்து வரப்படலாம் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் அவர்கள் யாரும் இதில் வரவில்லை.

88 பேர் துனிஷியா சென்றனர்:

இந்த நிலையில், 88 இந்தியர்கள் சாலை மார்க்கமாக துனிஷியாவுக்கு தப்பிச் சென்றுள்ளனர்.


பாலைவனத் தூது

No comments:

Post a Comment