Sunday, February 27, 2011

எகிப்து:போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பலம் பிரயோகித்த ராணுவம்

கெய்ரோ,பிப்.27:முபாரக் ஆட்சியில் அங்கம் வகித்த அமைச்சர்களை இடைக்கால அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டுமெனக்கோரி தஹ்ரீர் சதுக்கத்தில் போராட்டம் நடத்த திரண்டவர்களை அந்நாட்டு ராணுவம் பலம் பிரயோகித்து வெளியேற்றியுள்ளது.

போராட்டத்தில் கலந்துக்கொண்ட மக்கள் மீது லத்திசார்ஜ் நடத்தியும் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டும் நடவடிக்கையை மேற்கொண்டது ராணுவம்.

கடந்த வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு மக்கள் தஹ்ரீர் சதுக்கத்தில் கூடினர். முபாரக் அமைச்சரவையிலிருப்பவர்கள் இடைக்கால அரசில் இடம்பெற மாட்டார்கள் என்ற ராணுவம் அளித்த வாக்குறுதியைப் பேண வேண்டுமென மனித உரிமை மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

நடு இரவுக்குப் பிறகு ராணுவம் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு தெரு விளக்குகளை அணைத்துவிட்டதாக மக்கள் தெரிவிக்கின்றனர். ராணுவத்தின் அத்துமீறிய நடவடிக்கையில் பலர் கடுமையாக காயமடைந்துள்ளனர்.

மக்கள் நகரத்தை விட்டு வெளியேறினாலும், அருகிலுள்ள இடங்களில் முகாமிட்டுள்ளனர். ஆனால், ராணுவத்தின் நடவடிக்கைக் குறித்து ராணுவ சுப்ரீம் கவுன்சில் மன்னிப்புக் கோரியுள்ளது.

புரட்சியின் புத்திரர்களுடன் பிரச்சனை ஏற்பட்டதில் வருந்துவதாகவும், எதிர்காலத்தில் இவ்வாறு நிகழாது எனவும் ராணுவ சுப்ரீம் கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.

செய்தி: பாலைவனத் தூது

No comments:

Post a Comment