Sunday, April 3, 2011

நடுவானில் விமானத்தில் விழுந்த ஓட்டை! பயணிகள் உயிர்தப்பிய அதிசயம்

வாஷிங்டன்:  நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம் ஒன்றின் மேற்கூரையின் ஒரு பகுதியில் திடீரென ஓட்டை விழுந்ததால் அந்த விமானம் கட்டுப்பாட்டை இழக்க ஆரம்பித்தது உஷாரான விமானிகள் உடனடியாக விமானத்தை தரை இறக்கியதால் அதிலிருந்த 118 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள போனிஸ் விமான நிலையத்திலிருந்து நேற்று உள் நாட்டு பயணிகள் விமானம் ஒன்று கலிபோர்னியாவில் உள்ள சாகிராமெண்டோ நகருக்கு 118 பயணிகளுடன் புறப்பட்டு சென்றது.. விமானம் புறப்பட்ட அரை மணியில் விமானத்தின் உள்பகுதியில் திடீரென காற்றழுத்தம் குறைவு ஏற்பட்டது. இதனால் விமானம் கட்டுப்பாட்டை இழக்க ஆரம்பித்தது.
இந்நிலையில் விமானத்தின் கூரைப் பகுதியில் ஓட்டை இருப்பதை கண்ட பயணிகள் உடனடியாக விமானிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அந்த விமானம் யுமா என்ற இடத்தில் உள்ள விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரை இறக்கப்பட்டது. இதனால் அதில் பயணம் செய்த 118 பயணிகளும் காயமின்றி  அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள. இச்சம்பவம் அமெரிக்க விமான பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment